புது தில்லி: நான் கண் கலங்கினேன்; ஆனால் அவர் மன உறுதியுடன் நின்றார் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துடனான சந்திப்பு குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி அவருடைய நீதிமன்றக் காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் தில்லி சிறப்பு நீதிமன்றம் முன் வியாழனன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆஜர்படுத்தப்பட அழைத்து வரப்பட்ட சிதம்பரத்தை நீதிமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவிற்கு ஒன்பது முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த ஒரு பெருமகனை காண நான் தில்லிக்கு வந்திருந்தேன். ப.சிதம்பரத்தை நான் கண்டதும் கண் கலங்கினேன்; ஆனால் அவர் மன உறுதியுடன் நின்றார். சிறைவாசம் அவரது நிறத்தை மங்கச் செய்திருக்கலாம்; உடல் எடையைக் குறைத்திருக்கலாம். ஆனால் மன உறுதி சற்றும் குறையவில்லை.
அவரது வயது மற்றும் உடல்நிலையையும், நாட்டிற்கு அவர் செய்துள்ள தொண்டு கருதியும் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கும் என நம்புகிறேன்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.