பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவராக இருந்த சரத் யாதவின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, கட்சியின் அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அறிவிப்பு வந்தது. ஏற்கனவே சரத் யாதவுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, இவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், முதல்வர் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவராக போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு கட்சியின் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 16 மக்களவைத் தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களில் ஜே.டி.யூ வெற்றி பெற்றது. இதையடுத்து டெல்லி மற்றும் ஜார்க்கண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஜே.டி.யூ முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.