அக். 10-இல் கர்நாடகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள்கள் பயணமாக அக். 10-ஆம் தேதி கர்நாடகத்துக்கு வருகை தருகிறார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள்கள் பயணமாக அக். 10-ஆம் தேதி கர்நாடகத்துக்கு வருகை தருகிறார்.
 அரசு முறை பயணமாக அக். 10-ஆம் தேதி புது தில்லியில் இருந்து மைசூருக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு மைசூரு உடையார் மன்னர் மறைந்த ஜெயசாமராஜ உடையாரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். அன்று மைசூரில் தங்கும் அவர், மறுநாள் அக். 11-ஆம் தேதி நஞ்சன்கூடில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்துகிறார். பின்னர், சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபடுகிறார்.
 அதன் பிறகு, மைசூரில் உள்ள வருணா கிராமத்தில் ஜே.எஸ்.எஸ். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்றிரவு பெங்களூரு வருகை தரும் குடியரசுத் தலைவர், ஆளுநர் மாளிகையில் தங்குகிறார்.
 அக். 12-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுடன் காலை சிற்றுண்டி உண்கிறார். அதன் பிறகு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் எச்.என்.அனந்த்குமாரின் இல்லத்துக்குச் சென்று, அவரது மறைவுக்கு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார்.
 அதன் பிறகு, பெங்களூரு நகர மாவட்டத்தின் ஆனேக்கல் வட்டத்தின் ஜிகனியில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அணுகுமுறை பயிற்சி மையத்துக்குச் சென்று, அதன் செயல்பாடுகளைப் பார்வையிடுகிறார்.
 அதன்பிறகு, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஆமதாபாத் செல்கிறார் என கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com