
பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 97-ஆக அதிகரித்தது.
ஞாயிற்றுக்கிழமை மழை ஓய்ந்த நிலையில், கங்கை உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியது. அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்ரீபல்பூரில் புன்புன் நதியில் மணிக்கு 3 செ.மீ. வெள்ளம் வடிந்துவருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். சனிக்கிழமை முதல் 90 செ.மீ. அளவுக்கு நதி நீர் மட்டம் குறைந்துள்ளது என்றார் அவர்.
கமலா பலான், பாக்மதி, மஹாநந்தா, புர்ஹி கந்தக் ஆகிய நதிகளிலும் வெள்ள நீர் வேகமாக வடிந்து வருகிறது. நதிகள் கரைபுரண்டு ஓடியதால் பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்கள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 97-ஆக அதிகரித்ததாக மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கொசுக்களால் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகர் பாட்னாவில் ராட்சத பம்புகள் கொண்டு நீரை வெளியேற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும் ராஜேந்திர நகர் போன்ற ஒருசில இடங்களில் வெள்ளநீர் முற்றிலுமாக வடியவில்லை.