ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதையொட்டி, சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையொட்டி, காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆலோசகர்கள் மற்றும் தலைமைச் செயலருடன் ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் திட்ட ஆணையம் மற்றும் வீட்டு வசதி & நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர்களும் பங்கேற்றனர்.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரில் இருந்து வெளியேறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் அவர் அறிவித்தார். இதன்மூலம், இந்த உத்தரவு வரும் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.