கர்நாடகம்: நாளையுடன் மைசூரு தசரா திருவிழா நிறைவு

உலகப் புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் செவ்வாய்க்கிழமை (அக்.8) யானைகள் ஊர்வலத்துடன் நிறைவடையவிருக்கிறது.
கர்நாடகம்: நாளையுடன் மைசூரு தசரா திருவிழா நிறைவு

யானைகள் ஊர்வலத்தை தொடக்கி வைக்கிறார் முதல்வர் எடியூரப்பா
 

உலகப் புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் செவ்வாய்க்கிழமை (அக்.8) யானைகள் ஊர்வலத்துடன் நிறைவடையவிருக்கிறது. இந்த ஊர்வலத்தை முதல்வர் எடியூரப்பா தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்திலும் அவர் பங்கேற்கிறார்.
1610-ஆம் ஆண்டில் ராஜா உடையாரால் தொடக்கி வைக்கப்பட்டு, 409-ஆம் ஆண்டாக நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா செவ்வாய்க்கிழமையுடன் (அக்.8) மைசூரில் நிறைவடைகிறது. கடந்த செப்.29-ஆம் தேதி தொடங்கி 10 நாள்களாக நடைபெற்றுவந்த தசரா விழாவின் நிறைவுப் பகுதியாக நடைபெறும் யானைகள் ஊர்வலம் மைசூரு, அரண்மனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அன்று பிற்பகல் 2.15 மணி முதல் 2.58 மணிக்குள் நந்தி கொடிமர பூஜையை முதல்வர் எடியூரப்பா செய்யவிருக்கிறார். அதன்பிறகு, அன்று மாலை 4.31 மணி முதல் மாலை 4.57 மணிக்குள் அரண்மனை வளாகத்தில் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் யானை ஊர்வலத்தை (ஜம்போ சவாரி) முதல்வர் எடியூரப்பா தொடக்கி வைக்க உள்ளார். யானை ஊர்வலத்தில் அர்ஜுனா, பலராமா உள்ளிட்ட 12 யானைகள் கலந்து கொள்கின்றன. நிகழாண்டில் தங்கப் பல்லக்கை (அம்பாரி) அர்ஜுனா யானை சுமக்கிறது.
இந்த விழாவில், மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, பிரஹலாத் ஜோஷி, துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள், மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் வி.சோமண்ணா, கன்னட மற்றும் கலாசாரத் துறை சி.டி.ரவி, மைசூரு மாநகராட்சி மேயர் புஷ்பலதா ஜெகன்னாத், மைசூரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.சி.பரிமளா ஷியாம், பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.
தீப்பந்த ஊர்வலம்: யானைகள் ஊர்வலம் பண்ணி மண்டபத்தை அடைந்ததும், தசரா விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த ஊர்வலத்தை இரவு 7 மணிக்கு ஆளுநர் வஜுபாய் வாலா தொடக்கி வைக்கிறார். இந்த விழாவில், முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். தசரா விழாவையொட்டி மைசூரு விழாக் கோலம் பூண்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு: யானைகள் ஊர்வலம், தீப்பந்த ஊர்வலத்தைக் காண லட்சக்கணக்கான மக்கள் மைசூருக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, 5 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com