கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"காங்கிரஸ் தலைவர், கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக சித்தராமையாவை நியமித்துள்ளார். சட்டமேலவையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்ஆர் பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சித்தராமையாவின் பங்களிப்புக்கு கட்சி பாராட்டு தெரிவிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ஆர் பாட்டீல் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 எம்எல்ஏ-க்களும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏ-க்களும் ராஜிநாமா செய்ததையடுத்து, அங்கு ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார்.