பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்திருந்தனர்.
இதையடுத்து சசிகலா உள்ளிட்ட ஒருசில கைதிகளுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். இக்குழு சிறையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையின் கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது.
இருப்பினும் அறிக்கை குறித்த விவரங்கள் எதுவும் அப்போது வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அந்த அறிக்கையின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை விதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என்றும் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா கூறியது உண்மையே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.