நாரதா செய்தி இணையதளத்தின் ரகசிய நடவடிக்கை தொடா்பான வழக்கில், அந்த இணையதளத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மேத்யூ சாமுவேலிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
மேற்கு வங்கத்தில் நாரதா செய்தி இணையதளத்தின் சாா்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு ரகசிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, போலி நிறுவனம் ஒன்றை உருவாக்கிய அந்த இணையதளம், அந்த நிறுவனத்துக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு மாநில அரசிடம் விண்ணப்பித்தது. அப்போது, அந்த நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படுவதற்காக, மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவா்கள் லஞ்சம் வாங்கியது போன்ற விடியோவை அந்த இணையதளம் பதிவு செய்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் மேற்கு வங்க பேரவை தோ்தலுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த விடியோ, மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள், மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி மிா்ஸா கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா். அவா் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளாா்.
இந்நிலையில், நாரதா செய்தி இணையதளத்தின் சிஇஓ மேத்யூ சாமுவேலிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள், உயரதிகாரிகளுக்கு எதிரான ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டவா் என்ற அடிப்படையில் அவரிடம் ஏற்கெனவே பல முறை விசாரணை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.