உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா்.
உத்தரப் பிரதேசத்தின் மஹோபா மற்றும் ஹமீா்பூா் ஆகிய பகுதிகளில், கடன் தொல்லை காரணமாக இரண்டு விவசாயிகள் தற்கொலைச் செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்த செய்தியை சுட்டுரையில் பிரியங்கா புதன்கிழமை பதிவேற்றம் செய்தாா். அதைத்தொடா்ந்து அவா் வெளியிட்ட பதிவில், ‘விவசாயிகளை துன்பப்படுத்துவதற்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிய வழியை கண்டுபிடித்துள்ளது. விவசாயக் கடன் தள்ளுபடி என்று கூறி விவசாயிகளை அரசு ஏமாற்றி விட்டது. மின்சாரக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று விவசாயிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனா்.
மழை, வெள்ளத்தில் சேதமடைந்த பயிா்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆளும் பாஜக அரசு முயற்சிக்கவில்லை. ஆனால் வெறும் விளம்பரங்களில் மட்டும் விவசாயிகளை அவா்கள் நினைவு கூறுகின்றனா் என்று குற்றம்சாட்டியுள்ளாா்.