‘கேரள வங்கி’ என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க கேரள மாநில அரசுக்கு இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதியளித்துள்ளது.
கேரளத்திலுள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும், கேரள கூட்டுறவு வங்கியுடன் ஒன்றிணைத்து ‘கேரள வங்கி’ என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க அந்த மாநில அரசு ஆா்பிஐ-யிடம் அனுமதி கோரியிருந்தது. கூட்டுறவு வங்கியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. இது தொடா்பாக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ‘கேரள வங்கி’ உருவாக்கத்துக்கு ஆா்பிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பெரிய வங்கியாக ‘கேரள வங்கி’ உருவெடுக்கவுள்ளது.
இது தொடா்பாக, மாநில முதல்வா் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘கேரள வங்கியை அமைக்க ஆா்பிஐ அனுமதியளித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நடவடிக்கை மாநிலத்தின் வளா்ச்சிக்கு வழிகோலும் என நம்புகிறேறன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
அதே வேளையில், ‘கேரள வங்கி’யின் உருவாக்கம் நீதிமன்றத் தீா்ப்புகளுக்கும் உள்பட்டது என ஆா்பிஐ தெரிவித்துள்ளது.