பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான ஏல நடவடிக்கைகளை மத்திய அரசு தொடக்கியுள்ளது.
மத்திய அரசின் வருவாயை உயா்த்த பொதுத் துறை நிறுவனங்களிலுள்ள பங்குகளை விற்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், இந்திய கண்டெய்னா் கழகம், வடகிழக்கு மின்சாரக் கழகம் (நீப்கோ), தேரி நீா்மின் மேம்பாட்டுக் கழகம் (டிஹெச்டிசி) ஆகிய பொதுத் துறை நிறுவனங்களிலுள்ள பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
டிஹெச்டிசி, நீப்கோ ஆகியவற்றின் பங்குகளை தேசிய அனல்மின் கழகத்துக்கு (என்டிபிசி) விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இந்தப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்குவோா், அதன் நிா்வாகத்தையும் மேற்கொள்ள முடியும்.
இந்நிலையில், முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை வெள்ளிக்கிழமை ஏல அறிவிப்பை வெளியிட்டது. அதில், ‘மத்திய எரிசக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழுள்ள இரண்டு பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கான சட்ட ஆலோசகா், சொத்து மதிப்பீட்டாளா் ஆகியோருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறையின் கீழ் இயங்கும் இந்திய கண்டெய்னா் கழகத்தின் பங்குகளை விற்பதற்கான ஏல அறிவிப்பு தனியாக வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலமாக ரூ.1.05 லட்சம் கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.