ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடியை குஜராத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாட்கள் பயணமாக குஜராத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், இன்று குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் தயாரான ஹீராபென் மோடியை நேரில் சந்தித்து பேசினார். ஜனாதிபதியின் மனைவி சவிதாவும் அவருடன் சென்றிருந்தார். இருவரும் மோடியின் தாயாருடன் சுமார் அரை மணி நேரம் செலவிட்டனர். அப்போது ஜனாதிபதியும், அவரது மனைவியும் மோடியின் தாயாரிடம் ஆசி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜனாதிபதியும், அவரது மனைவியும் கோபாவிற்கு அருகே அமைந்துள்ள மகாவீர் ஜெயின் ஆரதான மையத்திற்குச் சென்றனர். அங்கு ஆச்சார்யா ஸ்ரீ பத்ம சாகர் சூரிஜியிடம் ஆசீர்வாதம் பெற்றனர். தொடர்ச்சியாக, ஜனாதிபதி இன்று மாலை டெல்லி திரும்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.