ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப. சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரம், தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சூழலில், அவரை கைது செய்து விசாரிக்க அனுமதி கேட்டு, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், ப. சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தேவைப்பட்டால் விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்து கொள்ளலாம் என்றும் அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அமலாக்கத் துறையினர் தில்லி திகார் சிறையில் வைத்து சிதம்பரத்திடம் நாளை விசாரணை நடத்துகின்றனர்.

முன்னதாக, இந்த மனு மீது நீதிபதி அஜய் குமார் குஹர் முன் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான குற்றங்கள் தனியானவை. இந்த விவகாரத்தில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றமே குறிப்பிட்டிருக்கிறது’ என்று வாதிட்டார்.

மேலும் படிக்க: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு

ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜரானார். அவர் வாதிடுகையில், ‘ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து, அமலாக்கத் துறை விசாரிக்க முடியும் என்றுதான் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. அவ்வாறு செய்யுமாறு உத்தரவிடவில்லை. இந்த வழக்கில் பணப் பரிவர்த்தனைகள், வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதாகக் கூறியே, ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் எடுத்தது. அதே விசாரணைக்காக, அவரை கைது செய்ய அமலாக்கத் துறை கோர முடியாது’ என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீது செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிப்பதாகத் தெரிவித்தார்.

வழக்கு விவரம்:

கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக, சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ப.சிதம்பரம், ஜாமீன் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com