உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த பெண் குழந்தை உயிருடன் எரிக்கப்பட்டு, தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று பல சமூக அமைப்புகளும் விழிப்புணர்வு பேரணியை நடத்தி வருகின்றன. இருந்த போதிலும், பிறந்த பெண் குழந்தைகளை சிசுக்கொலை செய்யும் சம்பவங்கள் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த உடனேயே பெண் குழந்தை ஒன்று தீக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதுகுறித்து விசாரணை செய்ததில், பெண் குழந்தை என்பதால் கொலை செய்ய முயற்சிதந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதற்கட்டமாக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் தான் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்துள்ளார். குழந்தையின் உடல் முழுவதுமே தீக்காயங்கள் இருப்பதால் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் பெற்றோரை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து சில மணி நேரங்களிலேயே பெண் குழந்தை எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.