பயங்கரவாதம் சமூகத்தின் சாபமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) 35-ஆவது நிறுவன தினம் ஹரியாணாவின் மனேஸாரில் செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட அமித் ஷா பேசியதாவது:
பயங்கரவாதம் சமூகத்தின் சாபமாகவும், வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ளது. பயங்கரவாத தாக்குதல்களால் நமது நாடு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்த ஆட்சி, பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்றுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் போர் காரணமாக பாதிப்புகள் இல்லையென்றாலும் கூட பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதத்தால் நாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவை நீக்கியதன் மூலம் அங்குள்ள பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அங்கும் அமைதி ஏற்படும்.
நமது தேசியப் பாதுகாப்புப் படையினரால் இதுபோன்ற பயங்கரவாதச் சம்பவங்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என நம்பிக்கையுடன் உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்தார்.