புது தில்லி: இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒரு நாள் முன்கூட்டியே வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகம், தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை தொடங்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவ மழை பெய்தாலும், அது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானதாக இருக்கும். ஆனால், தமிழகத்தின் பெரும்பாலான நீர் தேவையை வடகிழக்குப் பருவ மழையே பூர்த்தி செய்யும். அதாவது, தமிழகத்துக்கு தேவையான நீரில் 60 சதவீதம் வடகிழக்குப் பருவ மழையால்தான் கிடைக்கிறது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் இயல்பான அளவில் மழையைப் பொழிந்த நிலையில், தமிழகத்துக்கு வடகிழக்குப் பருவ மழையும் இயல்பான அல்லது இயல்பான அளவை விட 10 செ.மீ. அதிகமாக பெய்யும் என்று வானிலை மைய தகவல் தெரிவிக்கிறது.
மேலும் தெரிந்து கொள்ள.. அசத்தும் தென்மேற்குப் பருவ மழை; வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்? வானிலை மையம்
தமிழகத்துக்கு வழக்கமான வடகிழக்குப் பருவ மழையின் போது 44 செ.மீ. இயல்பான மழை அளவு என்றால் அதே அளவுக்கு மழை அல்லது அதற்கு 10 செ.மீ. அதிகமாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.