ப.சிதம்பரம் மீண்டும் கைது: இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை (74)
ப.சிதம்பரம் மீண்டும் கைது: இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை (74) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். முன்னதாக இதே வழக்கில் ப. சிதம்பரத்தை மத்திய புலனாய்வுத் துறையினர் (சிபிஐ) ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். 
இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில், அவரைக் கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், "அமலாக்கத் துறை அதிகாரிகள்  திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தலாம்; தேவை ஏற்பட்டால் அவரைக் கைது செய்யலாம்' என உத்தரவிட்டிருந்தது.
 இதையடுத்து, புதன்கிழமை காலை 8.15 மணிக்கு திகார் சிறைக்கு அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் மூவர் குழு சென்றது. அங்கு அவர்கள் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. பின்னர், சட்டவிரோதப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இந்த கைது குறித்து தில்லி ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹரிடம் அமலாக்கத் துறையின் விசாரணை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறையின் சார்பில் வழக்குரைஞர்கள் அமித் மஹாஜன், என்.கே. மட்டா ஆகியோர் திகார் சிறையில் விசாரணையின் போது சிதம்பரத்திடம் இருந்து அமலாக்கத் துறையினர் அறிக்கை பெற்றதாகவும் தெரிவித்தனர். மேலும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனுமதி கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த சிறப்பு நீதிபதி, சிதம்பரத்தை வியாழக்கிழமை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே, சிதம்பரத்தை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில் தனியாக ஒரு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் வியாழக்கிழமை விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
புதிய ஆதாரங்கள் மூலம் விசாரணை?: சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக சிதம்பரத்திடம் கடந்த காலங்களில் அமலாக்கத் துறையினர் பல முறை விசாரணை நடத்தினர். ஆனால், கைது போன்ற கட்டாய நடவடிக்கையை எடுக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால், அவர் கைது செய்யப்படவில்லை. தற்போது வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ள சில புதிய ஆதாரங்களின் அடிப்படையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும், அவரைக் காவலில் எடுத்து முழுமையாக விசாரிக்கும் போது, இதர குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் அவர் எதிர்கொள்ள நேரிடும் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
மேலும், இந்த விசாரணையின்போது கார்த்தி சிதம்பரம் உள்பட ப.சிதம்பரத்தின் குடும்பத்தினருக்குத் தொடர்புடைய குறிப்பிட்ட வெளிநாடு சார்ந்த சொத்துகள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் எனத் தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com