பெங்களூரு: 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளை நெருங்குகிறது பணமதிப்பிழக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு.
தற்போதுதான் காவல்துறையினர் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிகக் கொடிய பிரச்னையை வெளி உலகுக்குக் கொண்டு வருகின்றனர்.
ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் எல்லாம் செல்லும் காலத்தில் காவல்துறையினர் நடத்திய சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் திருடர்களைப் பிடிக்கும் போது அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் பணம் என கட்டுக்கட்டாக காவல்நிலையங்களில் ஏராளமான தொகை பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருப்பதால், இந்த பணம் முக்கிய ஆதாரங்களாக இருக்கும். எனவே, இவற்றை அப்படியே கொண்டு போய் வங்கியில் கொடுத்து மாற்றவும் முடியாமல், காவல்நிலையத்தில் போதிய லாக்கர் வசதி இல்லாமல் பாதுகாக்கவும் முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.
இதுபோல கர்நாடக மாநிலம் முழுக்க பல லட்சக்கணக்கான பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட நோட்டுகள் குவிந்து கிடக்கின்றன. பெங்களூருவில் உள்ள காவல்நிலையங்களில் மட்டும் ரூ.81.3 லட்சம் இருக்கிறது.
ஒரு வழக்கின் ஆதாரமாக, சாட்சியாக இருக்கும் ரூபாய் நோட்டுகளை, பணமதிப்பிழக்கம் நடவடிக்கையின் போது எவ்வாறு மாற்றுவது என்று தெரியாமல் பல காவல்நிலையங்களில் அப்படியே விட்டுவிட்டனர்.
பொதுவாக விலை மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தால் மட்டும் அதனை அரசின் கருவூலத்தில் ஒப்படைப்போம். மற்ற அனைத்துப் பொருட்களும் காவல்நிலையங்களிலேயே நீதிமன்றத்தின் சான்றிதழ் பெற்று பாதுகாப்பாக வைக்கப்படும்.
ஆனால், பெரும்பாலான காவல்நிலையங்களில் பாதுகாப்புப் பெட்டகங்கள் இல்லாததால், இருக்கும் ஒரே ஒரு பீரோவில் அனைத்துப் பொருட்களையும் வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதில் மேலும் சோகம் என்ன தெரியுமா? நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கில் தீர்ப்பு வெளியாகி, பாதிக்கப்பட்ட நபருக்கு அந்த பணத்தை ஒப்படைக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டால், காவல்துறையினர், இந்த பணமதிப்பிழக்கம் செய்யப்பட்டு நோட்டுகளைதான் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பார்கள்.
இதன் மூலம் ஏற்கனவே பணத்தை இழந்தவர்கள், தாங்கள் இழந்த பணம் தற்போது செல்லாக்காசாக திரும்பி வந்திருப்பதை நினைத்து அழுவதா? அழுதுகொண்டே சிரிப்பதா என்று தெரியாமல் புலம்ப வேண்டியதுதான்.