புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த தனது பரிந்துரைக் கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். இவர் உச்ச நீதிமன்றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாவர். கடந்த ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பொறுப்பேற்ற இவர், வரும் நவம்பர் 17-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
வழக்கமாக நீதித்துறை உயர் பதவி நியமனங்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறையின்படி, சரியான சமயத்தில் மத்திய சட்ட அமைச்சகமானது தலைமை நீதிபதியிடம், அடுத்த தலைமை நீதிபதிக்கான பரிந்துரையினைக் கோரும்.
பின்னர் அந்தப் பரிந்துரையானது பிரதமருக்கு அனுப்பப்படும். அவர் அதனை ஜனாதிபதிக்கு தனது கருத்துடன் இணைத்து அனுப்பி வைப்பதுதான் பின்பற்றப்படும் நடைமுறையாகும். பொதுவாக பணி மூப்பின் அடிப்படையில் இரண்டாவது மூத்த நீதிபதிதான் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்த தனது பரிந்துரைக் கடிதத்தை, மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அனுப்பியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியான பாப்டேவை பரிந்துரை செய்துள்ளார் என்று தெரிகிறது. பரிந்துரையின்படி நவம்பர் 18-ஆம் தேதியன்று பதவியேற்கும் பாப்டே, ஏறக்குறைய ஒன்றரை வருடங்கள்கு அந்தப் பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.