புபனேஸ்வர்: அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாகதான் வரும் என்று எதிர்பார்ப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதன்மைச் செயலர் சுரேஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய செயலர்களுக்கான மூன்று நாள் மாநாடு ஒதிஷா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் இதில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முதன்மைச் செயலர் சுரேஷ் ஜோஷி பேசியதாவது:
அயோத்தி வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. நாங்கள் அதன் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். அநேகமாக அயோத்தி வழக்கின் தீர்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாகதான் வரும். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் உருவாகும் சூழ்நிலையை பொறுத்து, அடுத்து என்ன செய்வதென்று ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்யும்.
அசாமைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டம் செயல்படுத்தப்ப்பட வேண்டும். இந்த திட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை. நாட்டின் நலனுக்கானது.
நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்பதால் பொது சிவில் சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.