மத்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் உயர் அதிகாரிகளின் பாலியல் தொந்தரவு காரணமாக பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள 'பெல்' நிறுவனத்தில் 'கணக்கு அலுவலராக' (Accounts Officer) வேலை செய்து வந்துள்ளார். 33 வயதான இவர் வியாழக்கிழமை மியாப்பூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் அதிகாரியின் இந்தத் தற்கொலை குறித்து மியாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் அதிகாரிக்கு அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். துணை பொது மேலாளர் (நிதி) மற்றும் அவருடன் வேலை செய்யும் 6 சக அதிகாரிகள் பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் இதுகுறித்து கூறுகையில், பெண் அதிகாரி தனியாக இருந்தபோது தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே இருந்த குடும்பத்தினர், வீட்டிற்கு வந்து பார்த்த போது அவரது உயிர்.பிரிந்திருந்ததது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட பெண் அதிகாரி ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், தனது நிறுவனத்தின் டிஜிஎம் மற்றும் ஆறு சக அதிகாரிகள் தனது மொபைல் போனை ஹேக் செய்து தனது மொபைலில் வரும் போன் அழைப்புகளை வைத்து மிரட்டி தன்னை துன்புறுத்தியதாக அவர் அதில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர்களில் சிலர் பாலியல் தொந்தரவும் செய்ததாக.குறிப்பிட்டுள்ளார்.
பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் மேற்குறிப்பிட்ட பொது மேலாளர் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.