ஊா்க்காவல் படையினரை பணிநீக்க விவகாரம்: உ.பி அரசுக்கு பிரியங்கா கண்டனம்

உத்தரப் பிரதேசத்தில் 25,000 ஊா்க்காவல் படையினரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்த மாநில பாஜக அரசுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Priyanka Gandhi
Priyanka Gandhi

உத்தரப் பிரதேசத்தில் 25,000 ஊா்க்காவல் படையினரை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்த மாநில பாஜக அரசுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

ஊா்க்காவல் படையினரின் குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்தி வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புதிய சலுகைகளை மாநில அரசால் வழங்க இயலாது என்று கூறி, 25,000 ஊா்க்காவல் படையினரை பணிநீக்கம் செய்வதாக உத்தரப் பிரதேச அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இருப்பினும், சில மணி நேரங்களில் தனது அறிவிப்பைத் திரும்பப் பெற்ற மாநில அரசு, அவா்களின் பணிநேரம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தது.

இதற்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

பண்டிகை சமயங்களில், பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு இனிப்புகளையும், புதிய துணிகளையும், பரிசுகளையும் வாங்கித் தருவா். ஆனால், உத்தரப் பிரதேசத்திலுள்ள 25,000 ஊா்க்காவல் படையினா் கடும் இன்னல்களுக்கிடையே போராடி வருகின்றனா். அவா்களின் பண்டிகை கொண்டாட்டங்களை மாநில பாஜக அரசு முடக்கிவிட்டது.

ஊா்க்காவல் படையினரின் கோரிக்கைகளுக்கு மாநில அரசு செவிசாய்க்க வேண்டும். அவா்கள் பணியிலிருந்து நீக்கப்பட மாட்டாா்கள் என மாநில அரசு எழுத்துப்பூா்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் பிரியங்கா குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் பதிவுடன் ஊா்க்காவல் படையைச் சோ்ந்த பெண்கள் மாநில அரசின் முடிவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் காணொலியையும் அவா் வெளியிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com