மாநிலத்தின் தொலைதூர மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் பைக்குகள் மூலம் மருத்துவ சேவைகளை வழங்குமாறு ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
மருத்துவ மற்றும் சுகாதாரத் துறையின் மறுஆய்வுக் கூட்டத்தின் போது, சமுதாய மருத்துவமனைகள், பகுதி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள அனைத்து வளர்ச்சி மற்றும் சீரமைப்பு பணிகளையும் 2020 டிசம்பருக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மகப்பேறு மையத்தை நிறுவுதல், ஒய்.எஸ்.ஆர். கான்டி வேலுகு திட்டத்தை கல்லூரி மாணவர்களுக்கு நீட்டிப்பது உள்ளிட்டவை ஒரு மாத காலத்தில் நிறைவேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதன்மூலம் அனைத்து மாணவர்களின் முழு உடல்திறன் குறித்து உரிய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுநீரக நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.10,000 நிதி உதவி திட்டத்தை கீழ் தலசீமியா, ஹீமோபிலியா, சிக்கிள் செல் அனீமியா உள்ளிட்ட நோயாளிகளுக்கும் நீட்டிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி அறுவை சிகிச்சை செய்துகொண்டவருக்கு அதன் பின்பு ஒவ்வொரு நாளும் ரூ.225 அல்லது ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் ரூ.5,000 ஓய்வூதியப் பிரிவில் டெங்கு உள்ளிட்ட மேலும் நான்கு பருவக்கால் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்க்குமாறு அதிகாரிகளிடம் கூறினார். ஜனவரி 1-ஆம் தேதி முதல், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியஸ்ரீ சேவைகளில் சுமார் 2,000 நோய்கள் மற்றும் மீதமுள்ள மாவட்டங்களில் 1,200 நோய்கள் சேர்க்கும் முக்கிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுள்ளார். அதில், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பணத்திற்காக காத்திருப்பதற்கு பதிலாக மருத்துவமனையில் சிகிச்சைகளைப் பெறும் விதமாக இந்த திட்டத்தை தயார் செய்து, இதனால் அரசாங்கத்தின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துமாறு இருக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.