கர்நாடகத்தில் காப்பியடிப்பதை தவிர்க்க தேர்வு நேரத்தின் போது மாணவர்களின் தலையில் அட்டைப் பெட்டியைக் கவிழ்த்து தனியார் கல்லூரி ஒன்று விநோத நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கு அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹவேரியில் உள்ள பகத் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயிலும் 34 மாணவர்கள் இவ்வாறு தேர்வு எழுத உத்தரவிடப்பட்டுள்ளனர். வேதியியல் தேர்வின் போது சக மாணவருடன் பேசக்கூடக் கூடாது என்னும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டது.
அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அங்கு விரைந்த பல்கலை. துணை இயக்குநர் எஸ்.எஸ்.பிர்ஜதே, அக்கல்லூரிக்கு விரைந்து, அந்த சம்பவம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, நோட்டீஸ் வழங்கியுள்ளார்.