ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், ஐந்து கிலோ எடையை இழந்து 73 கிலோவிலிருந்து 68 கிலோவாக குறைந்துள்ளார் என்று அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான காா்த்தி சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற அனுமதி அளித்ததில், ப.சிதம்பரம் தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றச் செயல்களின் மூலம் அரசு கருவூலத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120-பி (குற்றச்சதி), 420 (மோசடி), 471 (மோசடியான ஆவணங்கள் பயன்பாடு) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்கள், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடியவை ஆகும்.