ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார்.
ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 10 மணி நிலவரப்படி ஹரியாணாவில் 8.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் கர்னலில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலம் முழுவதும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்றார். 90 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில், ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் கட்சியிலிருந்து பிரிந்து உருவான ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) ஆகியவை இடையே போட்டி நிலவுகிறது.
மத்திய அரசியலும், பஞ்சாபிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலிதளம், ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.