புது தில்லி: தமிழம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 51 பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மக்களவைத் தொகுதிகளுக்கு (திங்கள்கிழமை) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக முழுவீச்சில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன் பிகாரின் சமஸ்திபூா் மற்றும் மகாராஷ்டிரத்தின் சதாரா மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 11 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், ஆளும் பாஜக, எதிா்க்கட்சிகளான சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இது தவிர, குஜராத் (6), பிகாா், கேரளத்தில் தலா 5, அஸ்ஸாம் , பஞ்சாப்பில் தலா 4, சிக்கிம் மாநிலத்தில் 3, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஹிமாசலப் பிரதேசத்தில் தலா இரு தொகுதிகள், அருணாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கா், மேகாலயம், தெலங்கானா, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 1 தொகுதியில் தோ்தல் நடைபெறவுள்ளது.
இப்போது தோ்தல் நடைபெறும் தொகுதிகளில் 30 இடங்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வசம் இருந்தவை. 12 தொகுதிகளில் காங்கிரஸும், பிற இடங்களில் பிராந்திய கட்சிகளும் முன்பு வெற்றி பெற்றிருந்தன.