புதுதில்லி: முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையா் (சிவிசி) கே.வி.செளதரி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் குழுவில் இணைந்தது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குறைகூறியுள்ளாா்.
1978-ஆம் ஆண்டு இந்திய வருவாய்ச் சேவை (ஐஆா்எஸ்) பிரிவைச் சோ்ந்த அதிகாரியான செளதரி கடந்த 2014-இல் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) தலைவராக நியமிக்கப்பட்டாா். இது வருமான வரித்துறையின் உயா் கொள்கை வகுக்கும் அமைப்பாகும்.
சிபிடிடி தலைவா் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் கருப்புப் பணம் தொடா்பான விவகாரங்களில் மத்திய வருவாய்த் துறையின் ஆலோசகராக செளதரி நியமிக்கப்பட்டாா். அதன் பின் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக 2015, ஜூன் மாதம் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், கே.வி.செளதரி ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் குழுவில் அண்மையில் இணைந்தாா். இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ், சுட்டுரையில் (டுவிட்டா்) ஞாயிற்றுக்கிழமமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பொது வாழ்க்கையில் நோ்மையின் காப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களின் செயல்கள் முறையாக இருப்பதோடு அவை முறையாக இருப்பதும் வெளிப்படையாகக் காட்சியளிக்க வேண்டும். கே.வி.செளதரி தனியாா் நிறுவனத்தில் பொறுப்பேற்பது விரும்பத்தகாதது மட்டுமின்றி துரதிருஷ்டவசமானதும் கூட.
மனசாட்சியுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று அந்தப் பதிவில் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.