ரயில்வே வாரியத்தின் அதிகாரிகள் 50 பேரை மண்டல அலுவலகங்களுக்கு இடமாற்ற முடிவு

ரயில்வே வாரியத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையாக, அதிலுள்ள இயக்குநர் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகளை மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கு மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. 
ரயில்வே வாரியத்தின் அதிகாரிகள் 50 பேரை மண்டல அலுவலகங்களுக்கு இடமாற்ற முடிவு


புது தில்லி: ரயில்வே வாரியத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையாக, அதிலுள்ள இயக்குநர் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகளை மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கு மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. 
ரயில்வே வாரியம், மண்டல ரயில்வே அலுவலகங்களின் செயல்திறனை மேம்படுத்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. 
இதுதொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: 
ரயில்வே வாரியத்தில் தற்போது 200 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 150}ஆக குறைக்கப்படும். இயக்குநர் மற்றும் அதற்கு மேலான அந்தஸ்தில் இருக்கும் எஞ்சிய அதிகாரிகள் 50 பேர் மண்டல அலுவலகங்களுக்கு மாற்றப்படுவர். 
ரயில்வே வாரியத்தில் ஒரே மாதிரியான பணியை பலர் செய்து கொண்டிருப்பதாலும், மண்டல அலுவலகங்களின் செயல்திறனை மேம்படுத்த அங்கு உயரதிகாரிகளின் தேவை இருப்பதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 
நீண்டகாலமாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்த இத்திட்டம், விரைவில் அமல்படுத்தப்படும். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலின் 100 நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரயில்வே வாரியத்தின் தற்போதைய தலைவர் வி.கே. யாதவ் இந்த விஷயத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். 
ரயில்வே வாரியம் உள்பட, இந்திய ரயில்வேயில் ஊழியர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாகவே உள்ளது. இது ரயில்வேயின் செயல்திறனை முற்றிலும் பாதிக்கிறது. ரயில்வேக்கு உண்மையில் தேவைப்படும் ஊழியர்களின் துல்லியமான எண்ணிக்கையை அறிய இதுவரை எந்தவொரு தீவிர நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதில்லை. அதை அறிந்தால் ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்துவதுடன், நிதியை சிக்கனமாக பயன்படுத்த இயலும். 
ரயில்வே துறையின் அளவை மிகச் சரியாக மாற்றுவதற்கான அரசியல் ரீதியிலான துணிச்சல் இல்லாததாலேயே முன்பு இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில்லை. ரயில்வே துறையை முறைப்படுத்துவதின் முதல் நடவடிக்கையாகவே, ரயில்வே வாரியத்தின் அதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்கும் முடிவை ரயில்வே அமைச்சகம் மேற்கொண்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் கூறின. 
இந்நிலையில், ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்யுமாறு சமீபத்தில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ், வாரிய உறுப்பினர்கள், மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். மேலும், அலுவலக உதவியாளர்களை தேவையான எண்ணிக்கையில் மட்டுமே பணியில் ஈடுபடுத்துமாறு கூறியுள்ளார்.
இந்திய ரயில்வேயில் முடிவுகளை மேற்கொள்ளும் முக்கிய அமைப்பான ரயில்வே வாரியத்தில் அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைப்பதென முதன்முதலில் கடந்த 2000}ஆம் ஆண்டு வாஜ்பாயின் அரசின்போது திட்டமிடப்பட்டது. 
ரயில்வே வாரியத்தை மறுகட்டமைப்பு செய்வதற்காக கடந்த 2015}ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேக்கான விவேக் தேவ்ராய் குழு பரிந்துரைத்தது. இந்திய ரயில்வேயின் அதிகாரமையப்படுத்தப்பட்ட கட்டமைப்பும், ஒவ்வொரு துறைகளிலும் தனி குழுக்களாகச் செயல்படும் தன்மையும் ரயில்வேயின் பணிக் கலாசாரத்தை பாதிப்பதாகவும், துறை ரீதியான இலக்குகளை நோக்கிய செயல்பாட்டை மட்டுப்படுத்துவதாகவும் அந்தக் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com