கொச்சி: கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, ஆங்காங்கே வெள்ளநீர் தேங்குவதால், கொச்சி மாநகராட்சி கடும் விமரிசனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்பி ஹிபி ஏடன் மனைவி அன்னா லிண்டா ஏடன் தனது பேஸ்புக்கில் போட்ட பதிவு கடுமையான விமரிசனைத்தைக் கிளப்பியது.
இன்று காலையில், இவரது பேஸ்புக் பதிவுதான் வைரலானது.
அதாவது, அவர் இரண்டு விடியோக்களை ஒன்றாக இணைத்து வெளியிட்டுள்ளார். ஒரு விடியோவில், மீட்புப் படகில் தனது குழந்தையை அன்னா லிண்டா ஏடன் ஏற்றுகிறார். மற்றொரு விடியோவில் அவரது கணவர் ஹிபி ஐஸ்க்ரீமை உண்கிறார். இவ்விரண்டு விடியோக்களையும் இணைத்து, தலையெழுத்தும் பலாத்காரத்தைப் போன்றதுதான். ஒரு வேளை உங்களால் தடுக்க முடியாவிட்டால் அனுபவிக்க வேண்டியதுதான் என்று தெரிவித்திருந்தார்.
திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையால், ஹிபி ஏடனின் வீட்டின் கீழ்த்தளம் முழுக்க வெள்ளத்தால் சூழப்பட்டது. இது குறித்துத்தான் லிண்டா ஏடன் மேற்கண்டவாறு பதிவை இட்டிருந்தார்.
இதற்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமரிசனங்கள் எழுந்தன.
இதற்கு விளக்கமும் அவர் அளித்துள்ளார், அதாவது, மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சொல்லவே அவ்வாறு பதிவிட்டிருந்தேன். ஒரு எம்பியின் மனைவியாக, பொதுமக்களின் துயரத்தில் தானும் பங்கேற்கிறேன் என்பதை சொல்லவே அவ்வாறு பதிவிட்டிருந்தேன். ஆனால் எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது என்றும், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் கூறியுள்ளார்.