ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்தனர். அவர், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜாமீன் வழங்கக் கோரி, தில்லி தில்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார், அவரது ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 30-ஆம் தேதி நிராகரித்து விட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவரது சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்குதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் சாட்சிகளைக் கலைத்து விடுவதற்கு பாய்ப்புள்ளது என்று அவர் வாதிட்டார்.
ஆனால், சிபிஐ தரப்பின் குற்றச்சாட்டுகளுக்கு சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு ரூ.1 லட்சம் பிணைத் தொகையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், வெளிநாடு செல்லக்கூடாது என்று கூறி நீதிபதிகள் செவ்வாய்கிழமை உத்தரவிட்டனர்.