கடந்த 90 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பு குறிவைத்து தாக்கப்பட்டே வருகிறது; ஆனால், அதுபற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் திங்கள்கிழமை, அந்த மாநில பேரவைத் தேர்தலில் மோகன் பாகவத் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளித்து கெளரவிக்க வேண்டும் என்ற பாஜகவினரின் கோரிக்கைக்கு காங்கிரஸ், இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு கடந்த 90 ஆண்டுகளாக குறிவைத்து தாக்கப்பட்டுதான் வருகிறது. ஆனால், அதைப்பற்றி நாங்கள் பெரிதாக கவலைப்படவில்லை; ஏனெனில், சமுதாயத்தில் அனைத்துத் தரப்பினரும் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் மாறுவதில்லை. சாவர்க்கர் விஷயத்தில் அரசியல் நடக்கிறது. இதுவும் சமுதாயத்தின் ஒரு பகுதிதான் என்றார்.
தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்ற கேள்விக்கு, நான் அரசியல்வாதியல்ல. இதுபோன்ற தேர்தல் முடிவுகளை கணித்துக் கூற என்னால் முடியாது. 3 நாள்களில் முடிவு வரப்போகிறது. அப்போது யார் வென்றார்கள் என்பது தெரியவரும். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறும்போதுதான், அது முழுமையான ஜனநாயகமாக இருக்கும். தனிப்பட்ட நபர்களைப் பார்த்தோ, சூழ்நிலை காரணமாகவோ வாக்களிக்கக் கடாது. நாட்டிலும், மாநிலத்திலும் உள்ள பிரச்னைகளைக் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.