நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 13-ஆம் தேதி முடிவடையவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் இருஅவை செயலர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், இரு முக்கிய அவசர சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது உள்பட பல்வேறு மசோதாக்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மந்த நிலையை சரிசெய்வதற்காக, கடந்த 1961-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்து மத்திய அரசு கடந்த மாதம் அவசர சட்டம் இயற்றியது. அதன்படி, பெருநிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது. மேலும், அதே மாதத்தில் இ-சிகரெட்டுகள் உள்ளிட்டவை விற்பனை மற்றும் சேமிப்புக்கு தடை விதித்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த இரு அவசர சட்டங்களுக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இரு ஆண்டுகளாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரம் வரை நடைபெற்ற நிலையில், இந்த முறை டிசம்பர் மாதம் பாதியிலேயே கூட்டத்தொடர் முடிவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.