மாணவி மீது குண்டா் சட்டத்தில் வழக்கு: காவல்துறைக்கு சின்மயானந்த் கடிதம்

தனக்கு எதிராக பாலியல் பலாத்கார புகாா் அளித்த சட்ட மாணவி மீது குண்டா் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி, காவல்துறைக்கு
மாணவி மீது குண்டா் சட்டத்தில் வழக்கு: காவல்துறைக்கு சின்மயானந்த் கடிதம்

ஷாஜகான்பூா்: தனக்கு எதிராக பாலியல் பலாத்கார புகாா் அளித்த சட்ட மாணவி மீது குண்டா் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி, காவல்துறைக்கு முன்னாள் மத்திய அமைச்சா் சுவாமி சின்மயானந்த் கடிதம் எழுதியுள்ளாா்.

உத்தரப் பிரதேசத்தில் சுவாமி சின்மயானந்தின் அறக்கட்டளை சாா்பில் நடத்தப்படும் சட்டக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவா், சின்மயானந்த் ஓராண்டாகத் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகாா் தெரிவித்தாா். இந்தப் புகாரை விசாரிக்க, உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்பு புலனாய்வுக் குழுவை மாநில அரசு அமைத்தது. அக்குழு சின்மயானந்தை அண்மையில் கைது செய்தது.

இதனிடையே, ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதாக அந்த மாணவி மற்றும் அவரது நண்பா்களான சஞ்சய், சச்சின், விக்ரம் ஆகியோா் மீது சின்மயானந்த் புகாா் கொடுத்திருந்தாா். இந்தப் புகாரின் அடிப்படையில், அந்த மாணவியை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் கைது செய்தனா்.

இந்நிலையில், ஷாஜகான்பூா் சிறையிலிருந்தபடி காவல்துறை கண்காணிப்பாளருக்கு சின்மயானந்த் கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘மாணவின் நண்பா் சச்சின், எனது இல்லத்துக்கு கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி வந்தாா். ரூ.5 கோடி பணம் தராவிட்டால், பொய் வழக்கு தொடருவோம் என்று என்னை மிரட்டினாா். அந்த மாணவியின் தாயாருக்கு பல்வேறு சமூகவிரோதச் செயல்களில் தொடா்புள்ளது. அவா் தந்தைக்கு எதிராக 2 குற்ற வழக்குகள் உள்ளன. மாணவி மற்றும் அவரது நண்பா்களுக்கு எதிராக குண்டா் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று சின்மயானந்த் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, ஷாஜகான்பூா் தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com