
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள இழப்பீடு தொடர்பான விதிமுறைகள் செல்லுபடியாகும் தன்மைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி அருண் மிஸ்ரா விலக மாட்டார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இடம்பெற்றுள்ள இழப்பீடு தொடர்பான விதிமுறைகள் செல்லுபடியாகும் தன்மை தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலிருந்து மாறுபட்டதையடுத்து, இந்த விவகாரத்தைக் கூடுதல் எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதற்காக, உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், எம்.ஆர்.ஷா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த அமர்வில் நீதிபதி அருண் மிஸ்ரா இடம்பெற்றுள்ளதற்குப் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் தனிநபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிபதி அருண் மிஸ்ராவை அரசியல் சாசன அமர்விலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதன் தீர்ப்பை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு புதன்கிழமை வழங்கியது. அப்போது, தீர்ப்பை வாசித்த அருண் மிஸ்ரா, இந்த வழக்கு விசாரணையிலிருந்து நான் விலகப் போவதில்லை என்றார்.
முன்னதாக வழக்கு விசாரணையின்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், இழப்பீடு குறித்த விதிமுறைகள் செல்லுபடியாகும் தன்மை தொடர்பான விவகாரத்தில் நீதிபதி அருண் மிஸ்ராவின் நிலைப்பாடு ஏற்கெனவே தெரிந்துவிட்டது. தற்போது அதே விவகாரத்தை விசாரிக்கும் அமர்வில் அவர் இடம்பெற்றிருப்பதை ஏற்க இயலாது. உச்சநீதிமன்றத்தின் நேர்மையை உறுதிசெய்யவே இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறோம் என்று வாதிட்டிருந்தார்.