நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தையும், எம்டிஎன்எல் நிறுவனத்தையும் இணைக்கும் முடிவை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அரசின் இவ்விரு தொலைத் தொடர்பு நிறுவனங்களையும் இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், இவ்விரு நிறுவனங்களையும் வலுப்படுத்துவதற்காக ரூ.68,751 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இந்த இணைப்பு நடவடிக்கை, பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான முதல் படி என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
முதல் படி: நிறுவனங்கள் இணைக்கப்படும்; இரண்டாவது படி: நிறுவனங்கள் தவறான முறையில் நிர்வகிக்கப்படும்; மூன்றாவது படி: மிகப்பெரிய அளவில் நஷ்டம் காண்பிக்கப்படும்; நான்காவது படி: அரசியல் புள்ளிகளுடன் தொடர்பில் உள்ள தொழிலதிபர்களுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.