ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் தொடர்பாக 3.2 மில்லியன் ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிராவிலும், ஹரியாணாவிலும் கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் நேற்று வெளியாகியுள்ளன. இதில், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. ஹரியாணாவில் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருகிறது.
இரண்டு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய சமயத்தில் இருந்து, அதுகுறித்து 3.2 மில்லியன் ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் குறித்த முக்கியச் செய்திகளை விவாதிக்கும் களமாக ட்விட்டர் உள்ளது என்று ட்விட்டர் இந்தியா இணையதளத்தின் மூத்த இணை அதிகாரி பயல் காமத் என்பவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் குறித்த ட்ரெண்டிங்கில் கட்சியின் முக்கியத் தலைவர்களான தேவேந்திர ஃபட்னாவிஸ், மனோகர் லால் கட்டார், ஆதித்யா தாக்கரே, ஷரத் பவார், மற்றும் சுபாஷ் பராலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இரு மாநிலங்களில் தேர்தலின் போது, #MaharashtraAsssemblyPolls, #HaryanaAssemblyPolls, #Maharashtra மற்றும் #Election2019 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.