தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தீபாவளிப் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரதமர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவருக்கும் வணக்கம் என ஹிந்தியில் கூறி தனது வாழ்த்தினைத் தொடங்கியுள்ளார். மேலும், வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்தும் தீபாவளிப் பண்டிகை தனக்கு பிடித்தமான ஒன்று எனக் கூறியுள்ள அவர், தீப ஒளித் திருநாளை தாம் எப்போதும் வரவேற்பதாகவும் பதிவிட்டு இந்திய மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.