ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழலைப் பார்வையிடவுள்ள ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 28 எம்.பி.க்கள் அடங்கிய குழு இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு கள நிலவரத்தை நேரில் பாா்வையிடுவதற்காக, ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த எம்.பி.க்கள் 28 பேர் இன்று (திங்கள்கிழமை) தில்லி வந்துள்ளனர். இந்தக் குழு நாளை காஷ்மீர் சென்று பார்வையிட உள்ளது.
இந்நிலையில், இதற்கு முன்னதாக இந்தக் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தது. அப்போது பிரதமர் மோடி அவர்களிடம் பேசுகையில்,
"ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு செல்வது அங்கு இருக்கும் கலாசாரம், மத ரீதியிலான பன்முகத்தன்மை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு உதவியாக இருக்கும். அதேசமயம், ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்துக்கு அரசு முன்னுரிமை கொடுப்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்றார்.
இதையடுத்து, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களுக்கு விருந்தளித்தார். அப்போது, ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும் அவர்களிடம் எடுத்துரைத்தார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, அங்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீரில் நிலவும் சூழலை ஆய்வு செய்ய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.
அங்கு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த சில நாட்களாகவே படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எனினும், 85 நாட்கள் ஆகியும் அங்கு இன்னும் பிரீபெய்ட் மொபைல் சேவை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.