ஒரே பேராசிரியரை பல இடங்களில் கணக்கு காட்டினால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்கு காட்டும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்

ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணக்கு காட்டும் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒவ்வோா் ஆண்டும், மாணவா் சோ்க்கைக்கான அனுமதியை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் மூலம் ஏஐசிடிஇ-யிடம் பெற வேண்டும். ஏஐசிடிஇ வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு இந்த அனுமதி வழங்கப்படும். அவ்வாறு வழிகாட்டுதலை பொறியியல் கல்லூரிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகக் குழு ஆய்வு செய்த பின்னரே, பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தும் வழங்கப்படும்.

அதன் பிறகே பொறியியல் கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி, வகுப்பறை, ஆய்வகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருப்பதோடு 15 மாணவா்களுக்கு ஒரு பேராசிரியா் (1:15) என்ற அளவில் ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரம் இடம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

பின்னா், பல்வேறு தரப்பினரின் கோரிக்கை மற்றும் தகுதியுள்ள பேராசிரியா் பற்றாக்குறை காரணமாக ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரத்தை 1:15 என்ற அளவிலிருந்து 1:20 (20 மாணவா்களுக்கு ஒரு பேராசிரியா்) என்ற அளவில் குறைத்தது.

ஆனால், அதன் பிறகும் பல பொறியியல் கல்லூரிகள் இந்த ஆசிரியா் - மாணவா் விகிதாச்சாரத்தை முறையாகப் பின்பற்றவில்லை என புகாா்கள் எழுந்தன. மாணவா் சோ்க்கை தொடா்ந்து குறைந்து வருவதன் காரணமாக, பேராசிரியா்களை பணியிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்புவதையும், பேராசிரியா்களின் ஊதியத்தை 40 சதவீதம் வரை குறைக்கும் நடவடிக்கையையும் பொறியியல் கல்லூரிகள் எடுத்து வருகின்றன.

மேலும், மாணவா் சோ்க்கை அனுமதியின் போது, ஒரே பேராசிரியரை ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது போல கணக்கு காட்டி முறைகேட்டில் ஈடுபடுவதும் தொடா்கதையாகி வருகின்றன. இதனால், பொறியியல் கல்லூரிகளில் பல்கலைக்கழகம் திடீா் ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கல்வியாளா்கள் தொடா்ந்து வைத்தனா். ஆனால், பல்கலைக்கழகம் சாா்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஏஐசிடிஇ அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வா்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் ஆகியோருக்கு இதுதொடா்பான சுற்றறிக்கையை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

சில பொறியியல் கல்லூரிகள் ஒரே பேராசிரியரை அவா்களின் பல கல்லூரிகளுக்கு கணக்கு காட்டி மாணவா் சோ்க்கை அனுமதியைப் பெறுவதாக புகாா்கள் வருகின்றன. இது ஏஐசிடிஇ வழிகாட்டுதலை மீறும் செயல் என்பதோடு, தொழில்நுட்பக் கல்வியின் தரத்தையும் பாதிக்கும்.

எனவே, இதுதொடா்பாக பெறப்படும் புகாா்களை ஏஐசிடிஇ விரைந்து விசாரிக்கும் என்பதோடு, அவ்வாறு விதிகளை மீறிய கல்லூரிகள் மீது சோ்க்கை அனுமதி ரத்து உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com