மும்பையில் பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பஞ்சாப்- மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பி.எம்.சி) ரூ.4,355 கோடி அளவிலான முறைகேடு நடந்துள்ளது சமீபத்தில் கண்டறியப்பட்டது. இந்த மோசடி குறித்து சிறப்புக்குழு ஒன்று விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முறைகேடு புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி, பி.எம்.சி வங்கியின் செயல்பாட்டை முழுவதுமாக நிறுத்தியது. இதனால் வங்கியில் பணம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை முலுந்த் காலனியைச் சேர்ந்த ஹேஷுமால் ஹிந்துஜா என்ற 68 வயது முதியவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். செவ்வாய்க்கிழமை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அவர் வீட்டின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
அவர் பி.எம்.சி வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியவில்லை என்று மனக்கவலையுடன் இருந்ததால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அவரது மகள் தெரிவித்துள்ளார். மேலும், எந்த ஒரு உடல்நல பிரச்னையும் அவருக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
இதுபோன்று மும்பையில் பி.எம்.சி வாடிக்கையாளர்கள் மூன்று பேர் மன அழுத்தத்தினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.