புது தில்லி: தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் குறித்து பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளரான நரசிம்ம ராவ் தில்லியில் வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காரணம் சொல்லப்படாத ராகுலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அவர் கூறியதாவது:
2014-ஆம் ஆண்டு துவங்கி தற்போது வரை ராகுல் காந்தி 16 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். அவற்றில் 9 பயணங்களுக்கு காரணம் என்ன என்பது வெளியே சொல்லப்படவில்லை. தனது தொகுதிக்குச் சென்றதை விட அதிக முறை வெளிநாடுகளுக்குச் சென்றவர் ராகுல் காந்தி. அதன்காரணமாகவே அமேதி மக்கள் அவரைத் தோற்கடித்துள்ளனர்.
அரசு விதிகளின்படி ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது வெளிநாட்டுப்பயணங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் இவ்வருடம் ஜூலை மாதம் எல்லா எம்.பிக்களிடமும், தங்களது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பொதுவாழ்க்கையில் உள்ள ஒருவர் எத்தனையும் மறைக்க கூடாது. அத்தனை ரகசியம் என்பது என்?
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.