இன்னும் 7 நாட்களுக்குள், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்படவில்லை என்றால், 2012 நிர்பயா பாலியல் குற்றவாளிகள் 4 பேருக்கும் விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று திகார் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குற்றவாளிகளுக்கு திகார் சிறைத் துறை நிர்வாகம் ஒரு நோட்டீஸை அளித்துள்ளது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 4 பேரில் 3 பேர் திகார் சிறையிலும், ஒருவர் மண்டோலி சிறையின் 14வது அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டது.
ஆனால், தீர்ப்பை மறுசீராய்வு செய்யவோ, தண்டனையை நிறுத்தி வைக்கவோ குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தை நாடவில்லை. எனவே, குற்றவாளிகள் நான்கு பேரும் 7 நாட்களுக்குள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி, அதற்கு பதில் பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நோட்டீஸ் குற்றவாளிகளிடம் அக்டோபர் 28ம் தேதி சிறைத் துறை அளித்துள்ளது.
இதன் பிறகு, குற்றவாளிகள் 4 பேரும் பதற்றத்தோடு காணப்படுவதாக சிறைத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை குறிப்பிட்ட 7 நாட்களுக்குள் கருணை மனு தாக்கல் செய்யப்படாவிட்டால், சட்டப்படி, குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான நடவடிக்கைகளில் சிறைத்துறை ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.