மும்பை காவல்துறை முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகா் (61), தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் விரைவில் பொறுப்பேற்க இருக்கிறாா்.
1982-ஆம் ஆண்டு மகாராஷ்டிர பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான பட்சல்கிகா், 26 ஆண்டுகளாக ‘ஐபி’ உளவுத் துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவராவாா். மும்பை காவல்துறை ஆணையராக 2016-ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பட்சல்கிகா், கடந்த ஆண்டில் ஓய்வுபெற்றாா்.
உளவுத் துறையில் பணியாற்றியபோது, தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் பட்சல்கிகா் இணைந்து பணியாற்றியுள்ளாா்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பட்சல்கிகரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மகாராஷ்டிர காவலா்களுக்கான பணி நேரத்தை 8 மணி நேரமாக பட்சல்கிகா் மாற்றி அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.