அயோத்யா: அயோத்தி வழக்கினைத் தொடுத்த வாதிகளில் ஒருவரான இக்பால் அன்சாரி மீது தேசிய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது அதிர்ச்சியினை உண்டாகிக்கியுள்ளது.
பரபரப்பான அயோத்தி வழக்கினைத் தொடுத்த வாதிகளில் ஒருவர் இக்பால் அன்சாரி. இவர் செவ்வாயன்று வர்த்திகா சிங் என்னும் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை தன் மீது தாக்குதல் நடத்தியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அயோத்யாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று என் வீட்டிற்கு பெண் ஒருவர் அவரது நண்பருடன் வந்திருந்தார். வர்த்திகா சிங் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர், அவர் என்னுடன் பேச விரும்புவதாகக் கூறினார். நான் அவர்களை உள்ளே அனுமதித்தேன். அவர் முதலில் முத்தலாக் மற்றும் ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார்.
திடீரென்று என் மீது குற்றச்சாட்டுகளைக் கூறத்துவங்கிய அவர், ராமர் கோவில் கட்டுவதற்கு நான் தடையாக இருப்பதாகக் கூறினார். அப்படியே ஆவேசமான அவர் என்னுடன் கைகலப்பில் ஈடுபடத் துவங்கினார். எனது பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரிடம் இருந்து என்னைக் காப்பாற்றி, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் தெரியப்படுத்தினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் அவர் இந்த சம்பவம் தொடர்பாக ராம் ஜென்மபூமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து பைசாபாத் மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட வர்த்திகாவிடம் அங்கு வைத்து விசாரணைநடத்தப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் எதுவும் கூறாத நிலையில், தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் வீராங்கனை என்று கூறப்படும் வர்த்திகா சிங்கிடம் பேச பத்திரிகையாளர்கள் யாரும் அனுமதிக்கக்கப்படவில்லை.