பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கர்நாடக முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஹவாலா முறையில் கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், சிவகுமாருக்கு எதிராக வருமான வரித் துறை கடந்த ஆண்டு வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர்.
இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு சிவகுமாருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மாலை அவர் அமலாக்கத் துறை முன் ஆஜரானார்.
இதுதொடர்பாக, கடந்த நான்கு நாட்களாக அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறையினர், தற்போது அவரை பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.