ஹெல்மெட் அணியாமல் சென்றதோடு, முறையான ஆவணங்கள் வைத்திருக்காத காரணத்தினால் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் 23,000 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் பெரும்பாலான இடங்களில் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், டெல்லி கிழக்குப் பகுதியில் வசித்து வரும் தினேஷ் மதன் என்பவர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் அவரை வழிமறித்து ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், அவரிடம் சான்றிதழ்கள் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது. இதற்காக, அவர் ரூ.23,000 அபராதம் செலுத்தியுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு ரூ.5,000, பதிவுச் சான்றிதழுக்கு ரூ.5,000, காப்பீடு சான்றிதழுக்கு ரூ.2,000, விதிமுறைகளை மீறி மாசுபாட்டை ஏற்படுத்தியமைக்கு ரூ.10,000 மற்றும் ஹெல்மெட் அணியாததற்கு ரூ.1,000 என மொத்தமாக ரூ.23,000 அபராதமாக செலுத்தியுள்ளார். டெல்லி குருகிராமில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சிக்னலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து மதன் கூறும்போது, 'நான் போக்குவரத்து விதிமுறைகளை மீறவில்லை. என்னிடம் ஆவணங்கள் இல்லை. நான் ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்டேன். அவர்கள் தரவில்லை. 10 நிமிடத்திற்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார்கள். நானும் எவ்வளவோ கோரிக்கை வைத்தேன். வேறு வழியில்லாமல் அபராதம் செலுத்த நேரிட்டது' என்று தெரிவித்தார்.