இந்தியாவில் ஆன்லைன் மூலமாக கற்பித்தல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல வேலைவாய்ப்பு தேடுபொறி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பான பிரபல தேடுபொறி நிறுவனமான 'இண்டீட்' பல்வேறு துறைகளில் காலியாக உள்ள வேலைவாய்ப்பு விபரங்களைத் தருகிறது. இதில், கடந்த மூன்று ஆண்டுகளில் 'ஆசிரியர்' பணிகளுக்கான தேவை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், 'தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஆன்லைன் கற்பித்தலை மாணவர்கள் அதிகமாக விரும்புவதால் இணையதளத்தில் கற்பிக்க ஆசிரியர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இண்டீட் மூலமாக வேலைக்கு விண்ணப்பித்துள்ளோர்/தேடுவோரின் எண்ணிக்கை, கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது.
மேலும், ஜூலை 2016ம் ஆண்டு முதல் இது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தங்கள் இருப்பிடத்தில் இருந்தே கற்பிப்பதால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் மீடியாவின் வளர்ச்சியே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்' என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
2017-18 நிதியாண்டில் ஆன்லைனில் ஆசிரியர் பணிக்காக தேடுவோரின் எண்ணிக்கை 14% அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இது 11% குறைந்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஒரு ஆசிரியரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.5.88 லட்சம் வரையில் உள்ளது. அதே ஆன்லைன் மூலமாக கற்பிக்கும் ஆசிரியரின் ஆண்டு வருமானம் இதற்கு இருமடங்காக ரூ.4.50 லட்சம் முதல் ரூ.9.25 லட்சம் வரை உள்ளது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.