மகாராஷ்டிர மாநிலம், நவி மும்பை பகுதியில் இயங்கி வந்த அரசு பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசியின் ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் ஓஎன்ஜிசி ஆலையில் செவ்வாய்க்கிழமை காலை 6.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து எரிவாயுக் கசிவு ஏற்பட்டதால் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த விபத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையை (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்; ஓஎன்ஜிசி பணியாளர் ஒருவரும் உயிரிழந்தார்; 3 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 22 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. 2 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்தினால் ஆலையில் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து, தொழிற்சாலையின் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அவர்களை வலியுறுத்தியுள்ளோம் என்றார் அந்த அதிகாரி.